மியன்மாரில் இராணுவத்தினரால் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை
பல தசாப்தங்களில் பின்னர் மியன்மாரில் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு ஜனநாயக ஆர்வலர்களே மியான்மர் இராணுவத்தால் இன்று (25) தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
ஜனநாயக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபியோ ஜீயா தாவ் உட்பட நால்வர் மீது பயங்கரவாத செயல்களை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தூக்கிலிடப்பட்டமைக்கான காரணம்
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மூடிய அறைக்குள்ளேயே விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்த நால்வரின் மரண தண்டனை குறித்து மியான்மரின் அரசு செய்தி நிறுவனமான குளோபல் நியூஸ் லைட் செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில், நான்கு பேரும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற பயங்கரவாத செயல்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதால் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எப்போது அல்லது எப்படி தூக்கிலிடப்படுவார்கள் என குறித்த ஊடகம் தகவல் வெளியிடவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
மியன்மாரில் 1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அது தொடர்பில் தமது கடும் கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் நாட்டின் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து நாட்டில் பரவலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்து ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும்
செய்தியாளர்கள் மீது இராணுவம் அடக்குமுறையை மேற்கொண்டுள்ளது.
இந்த கொலைச்செய்தி தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் மனிதஉரிமை
அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.