தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் தமிழரசு கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு (video)
யாழ்ப்பாணத்தில் மறைந்த தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் தமிழரசு கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இளைஞர் முன்னணியின் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்றலில் நேற்று (23.01.2023) திறந்துவைக்கப்பட்டது.
நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் இது திட்டமிட்ட உருமறைப்பு என இளைஞர் முன்னணியின் உறுப்பினர்கள், இந்த விடயம் தொடர்பில் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
மாவை சோ.சேனாதிராசா
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா பங்குபற்றியிருந்தார் எனவும் அவர் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ்வ்விடயம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் கூறியதாவது,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம்
ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கயவர்
கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத்
தருகின்றது”
கண்டனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் அமரர் தர்மலிங்கமும் ஒருவர். அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியுற்றமை கிடையாது. இதனால்தான் அவரை மக்கள் முடிசூடா மன்னர் என்று அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார்.
அவரது மகன் ஆயுதக்குழு உறுப்பினராக இருந்து பின் ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்டபோது தந்தையின் பெயரையும் தமிழரசுக் கட்சியின் பெயரையும் பயன்படுத்தித்தான் மக்கள் மனங்களை வென்றார். இன்று தர்மத்தையே கற்றுத் தந்த தர்மரின் சிலையில் அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தமிழரசின் வாலிபர்
முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இன்று காலை தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா நிகழ்வில் அவரை யார் கொலை
செய்தார்களோ அந்த ஆயுதக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும்
கலந்துகொண்டுள்ளார்கள். இன்று தனது தந்தையைக் கொன்ற கயவர்களுடன் அவரது மகன்
கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகிறது” என்றார்.