பல்கலைக்கழக நினைவுத் தூபி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில் இன்று (04.12.2023) நண்பகல் மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாடுகள்
இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய
சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டதற்கான அவசியத்தன்மை குறித்தும், தூபி அமைப்பதற்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பிலும் விளக்கமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கடந்த மாதம் 7 ஆம் திகதி விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இந்த விசாரணைகளின் போது, அன்றைய நிலைமையில் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பிலும், அதற்காகப் பெறப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் பல்கலைக்கழக நிர்வாகம் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்திருந்ததுடன், தூபி அமைப்பதற்காக அரச நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, தூபி அமைப்பதற்கான நிதி பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன், அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளையும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் இன்று நண்பகல் விசாரணைகளுக்குச் சமூகமளிக்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
மேன்முறையீடு
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சிரேஷ்ட பொருளாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர் ஒருவரும், தூபி அமைக்கப்பட்ட வேளையில் இருந்த மாணவர் ஒன்றியத் தலைவரும் இன்று நண்பகல் 1.00 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.
இதே நேரம், தூபி அமைப்புத் தொடர்பில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு பல்கலைக்கழகத் தகவல் அறியும் அதிகாரியும், மேன்முறையீட்டு அலுவலரும் வழங்கிய பதில் திருப்திகரமானதாக இருக்கவில்லை.
எனவே, இது தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு மீதான விசாரணைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி தகவல் அறியும் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விசாரணைகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகவல் அலுவலரும், முறைப்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், தான் முறைப்பாட்டைக் கைவாங்கிக் கொண்டுள்ளதனால், விசாரணைக்குச் சமூகமளிக்கப்பேவதில்லை என்று முறைப்பாட்டாளர்களில் ஒருவரான பேராசிரியர் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
தனது முறைப்பட்டை அடிப்படையாக வைத்து தன்னைத் தமிழ் சமூகத்துக்கு எதிராகச் செயற்படும் ஒருவராகச் சித்தரிக்கும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதனால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு அருகில் நகரும் “மிக்ஜாம்” சூறாவளி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
