வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள்
அம்பாறை வீரமுனை கிராமத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் நேற்றாகும்.
வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டதன் நினைவே வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினமாகும்.
உறவுகளுக்கான குரல்
இந்த நிலையில், வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.
ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990இல் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12ஆம் திகதி அங்கிருந்த ஊர்காவல்படையினர் மற்றும் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன.
தன்போது 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.
இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரத்தின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த நிகழ்விற்கு சம்மாந்துறை பொலிஸார் பலத்த பாதுகாபபு வழங்கியுள்ளனர்.












நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
