சுமந்திரனின் கடையடைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது! மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் கடும் எச்சரிக்கை
ஆவணி மாதம் 15ஆம் திகதி மடுத்திருத்தலத்தின் பிரதான திருவிழா அன்று வடக்கு கிழக்கில் அறிவிக்கப்பட்டிருக்கும் கடையடைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வருகைதரும் திருவிழா நாளில் இந்த கடையடைப்பை ஏற்பாடு செய்திருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல கண்டனத்திற்கு உரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமை
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கடையடைப்பைக்கான காரணங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு நாம் ஆதரவாக இருக்கின்றோம். இன்று மட்டுமல்ல மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் காலத்திலும் மன்னார் மறைமாவட்டத் திருச்சபை குறிப்பாக மன்னார் குருக்கள் ஆயரோடு இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து வகையான அநீதிகளுக்கு எதிராகவும் போராடியுள்ளனர். இதை முழு உலகமும் அறியும். இந்த நிலையில் மடுத்திருப்பதியின் ஆவணித்திருவிழாவை கவனத்தில் கொள்ளாமல் இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் எமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது. இவ்வேளையில் வரலாற்று ரீதியான சில விடயங்களையும்சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் கூட மடுத் திருப்பதியின் திருவிழாக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
பூரண ஆதரவு
அன்றைய அரசாங்கங்களும் சரி தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி இந்த திருவிழாக்களை எந்த இடையூறும் இல்லாமல் நடத்துவதற்கு தமது பூரண ஆதரவை ஒத்துழைப்பை வழங்கிவந்தனர் என்பதை இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கடையடைப்பை திருவிழாவுக்குப் பின்னர் வேறொரு நாளுக்கு பின்போடுமாறுமாறு வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
புதிய திகதிக்கு இந்தக் ஹர்த்தால் மாற்றப்படும்போது வழக்கம்போல மன்னார் மறைமாவட்டத் திருச்சபை இதற்கான பூரண ஆதரவை வழங்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம் எமது இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய திகதியை அறிவிக்குமாறு சுமந்திரனை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
