மயிலிட்டி மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு(Photos)
யாழ்ப்பாணம் மாவட்டம், மயிலிட்டி பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கை
குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மேற்படி சந்திப்பின் போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் பூர்வீகத் தமிழ் மக்களான மயிலிட்டி மக்களுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளைச் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மேலும் காணி சுவீகரிப்புத் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கடிதத்தில் மூவாயிரம் ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன்கீழ், தங்கள் காணிகளும் பறிபோய்விடுமோ எனத் தாம் அச்சமடைவதாக தெரிவித்துள்ளனர்.
காணி சுவீகரிப்பை தடுத்தல்

இது தொடர்பிலான முழுமையான விவரங்களோடு, காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில், மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தினர், மயிலிட்டி
வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,
பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.