வவுனியா மாவட்ட தேசிய போக்குவரத்து திணைக்களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் திடீர் விஜயம்
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் இயங்கும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவசான்றிதழ் வழங்கும் நிலையத்திற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, குறித்த இடத்திற்கு சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
மருத்துவசான்றிதழ் வழங்கும் நிலையத்திற்கு உரிய நேரத்தில் வைத்தியர் வருவதில்லை எனவும், அங்கு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறச் செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும்,அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மாவட்ட அபிவிவிருத்திக் குழுத்தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று குறித்த மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிலையத்திற்கு சென்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அதுவரை நேரமும் வைத்தியர் வராமைக்கான காரணம் தொடர்பில் கடமையில் இருந்த உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன், அங்கு நின்ற மக்களிடம் குறித்த நிலையத்தில் எதிர்நோக்கும் அசளகரியம் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த திணைக்களத்தின் செயற்பாடுகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளதால் நேரடியாக குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய முறையில் திணைக்களம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, அரச திணைக்களங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க இன்று முதல் நாடு முழுவதும் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



