கண்டியில் சண்டித்தனம் செய்த ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்!
கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கண்டி மருத்துவமனை வளாகத்தில் அடாவடியாக நடக்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 25ம் திகதி கண்டி மருத்துவமனை வளாகத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த 25ம் திகதி, கண்டி மருத்துவமனைக்கு உள்ளாக செல்லும் வழிப்பாதையால் தனது வாகனத்தில் உட்பிரவேசிக்க முயன்றுள்ளார்.
வாய்த் தர்க்கம்
அதன்போது அவரது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்கான இலச்சினையோ, அரச இலச்சினையோ இல்லாத நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து அவர் பாதுகாப்புப் பிரிவு ஊழியர்களுடன் கடுமையாக வாய்த் தர்க்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
''என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா'' என்று அவர் உரத்த குரலில் கேட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அவ்விடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதும், அவர்களுக்கும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
முறைப்பாடு
அதனையடுத்து தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொலிஸாருடன் கடுமையாக வாய்த்தர்ககம் செய்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களை விட தற்போதைய ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அடாவடித்தனங்களை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாக இதன்போது பொலிஸார் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சம்பவம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கண்டி மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.