சாள்ஸ் நிர்மலநாதன் - சிறீதரன் உட்பட முக்கியஸ்தர்கள் அமெரிக்கா பயணம்
வட அமெரிக்கவில் நடத்தப்படவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று பயணமாகியுள்ளார்.
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடத்தும் 'மாபெரும் பேரவை தமிழ் விழாவில்' பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ் சங்கத்தினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பயணம்
இந்நிலையில், சாள்ஸ் நிர்மலநாதன் இன்று அமெரிக்கா பயணமாகியுள்ளார். நாளை 1ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த பயணத்தில் அமெரிக்க அரசின் இராஜாங்க திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனும் 'தமிழர் தரப்பு நிலைப்பாடு' தொடர்பாக கலந்துரையாட சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திப்பு
அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகள் பலரோடும் சந்திப்புக்களையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம்(28) அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது
1. சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் சுதந்திர வாக்கெடுப்பு
2. வாக்கெடுப்பு நடைபெறும் வரை தீவின் வடக்கு - கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கான இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை
3. அரசியல் வாதங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் மூலம் உலகளவில் தமிழ் இனப்படுகொலை அங்கீகாரத்தை முன்னெடுப்பது
4. புலம்பெயர் தமிழர் நடவடிக்கைகள் UNHRC , ICC , ICJ , மற்றும் நாடுகளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக செயற்பாடு
5. தமிழர் இறையாண்மை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்காக குறுகிய மற்றும் நீண்ட காலப்பகுதியில் தமிழர் தேசத்தில் பொருளாதார வளர்ச்சி கட்டமைப்புக்களை உருவாக்குதல்
போன்ற விடயங்கள் அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.