மட்டக்களப்பில் உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவன் சிறிநாத் எம்பியிடம் ஆசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவன் பசிதரன் சர்ஜன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்தை மரியாதை நிமிர்த்தம் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த பசிதரன் சர்ஜன், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடும் சிரமங்கள்..
தந்தை இல்லாத நிலையில், தாயாரின் அரவணைப்பில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று மருத்துவப் படிப்பிற்குத் தெரிவாகியுள்ளார்.

இச்சந்திப்பின் போது, மாணவன் தனது எதிர்கால பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், ஒரு வைத்தியர் என்ற ரீதியில், நாடாளுமன்ற உறுப்பினர் தனது மருத்துவக் கல்லூரி கால அனுபவங்களை மாணவருடன் பகிர்ந்து கொண்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மாணவனின் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு, அவரது உயர்கல்வி தடைப்படாமல் தொடர்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக எனது முழுமையான பங்களிப்பை வழங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.






