இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..!
கடந்த வாரம் இந்துசமுத்திரத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள British Indian Ocean Territoryல் உள்ள டியாகோ காசியா(Diego Garcia) தீவிலுள்ள அமெரிக்க கூட்டுப்படைத் தளம்மீது ஈரான் ஏவிய Intermediate-Range Ballistic Missiles வகை ஏவுகணைகள் தீவை அண்மித்தபோது இடைமறித்து தாக்கி யழிக்கப்பட்டதாக the wall street Journal என்ற அமெரிக்க சஞ்சியை செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்குப் பின்னர் இந்து சமுத்திர தீவான டியாகோ காசியா உலகளாவிய ஊடகங்களில் முதன்மை செய்தியாக பேசப்படுகிறது. பிரித்தானியாவினதும், அமெரிக்காவினதும் இந்துசமுத்திர மேலாண்மையில் டியாகோ காசியா மூலோபாய ரீதியில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக முதன்மை பெற்று வந்திருக்கின்றது.
இந்த அடிப்படையில் டியாகோ காசியாவின் கடல்சார் கேந்திர மூலோபாய முக்கியத்துவமும் அதன் எதிர்காலம் பற்றியும் ஆய்வது அவசியமாகிறது. டியாகோ காசியா தீவு என்பது இந்துசமுத்திரத்தின் மத்தியபகுதியில் புவிமத்திய 0 பாகை அகலாக்கோட்டிற்கு தென்பகுதியில் கானப்படும் நூற்றுக்கணக்கான மிகச்சிறிய தீவுகளை சாகோஸ் தீவுக் கூட்டம்(Chagos Archipelago) என அழைக்கப்படும் தீவுகளில் ஒன்று.
டியாகோ காசியா தீவின் அமைவிடத்தை நோக்கினால் ஆபிரிக்காவின் தன்சானியாவையும், இந்தோனேசிய யாவா தீவையும் இணைத்து வரையப்படும் நேர்கோட்டின் இடைநடுவில் அமைந்துள்ளன.
ஆபிரிக்க கண்டத்தின் தான்சானியா கரையிலிருந்து 3,535 கி.மீ தூரத்திலும், இந்தியாவின் கன்னியாகுமரி முனையிலிருந்து தென்-தென்மேற்கே 1,796 கி.மீ தூரத்திலும், இலங்கையின் கொழும்பிலிருந்து 2,300 கி.மீ தூரத்திலும், ஆத்திரேலியாவின் மேற்குக் கரையிலிருந்து 4,723 கி.மீ தூரத்திலும். மாலைதீவுகளிலிருந்து தெற்கே 500 கி.மீ தூரத்திலும் ஈரானின் தெகரானிலிருந்து 4000 கி.மீ தூரத்திலும், அமெரிக்காவின் சாண் டியெகோவிலிருந்து 17,000 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. சாகோஸ் தீவுகள் (Chagos Archipelago) முன்னர் எண்ணெய்த் தீவுகள் (Oil Islands) என அழைக்கப்பட்டன.
டியாகோ காசியா
இவற்றினை தமிழில் பேகான தீவுகள் என்றும் திவெயி மொழியில்(மாலதீவு மக்கள் பேசும் மொழி) ஃபேகண்தீவு எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்திற்கு கீழ்ப்பட்ட தீவுகளாகும். இவற்றில் 60 சிறு தீவுகளைக் கொண்ட ஏழு பவளப்பாறைதீவுகள் கூட்டங்களாக அடையாளம் காட்டப்படுள்ளன.

7 சாகோஸ் தீவுகளினது மொத்த நிலப்பரப்பு 63.17 கி.மீ. களாகும். British Indian Ocean Territoryன் மொத்த ஆள்புலப்பரப்பளவு கடல் தரை அடங்களாக 15,000 சதுர கி.மீ. களாகும். இதில் டியாகோ காசியா தீவின் பரப்பு 27.20 கி.மீ.களாகும். இதன் வரலாற்றை நோக்குகிறபோது 1507ல் போர்த்துக்கேயர் முதன்முதலில் இந்திர சமுத்திரத்தின் தென்பகுதியில் சாகோஸ் தீவுகள், மற்றும் மொரிஷியஸ் பகுதிகளை கண்டுபிடித்தனர்.
அவர்கள் இதனை “Ilha do Cirne” என்று மொரிஷியஸை அழைத்தனர். டியாகோ காசியாத்தீவின்(Diego Garcia) பெயர்கூட போர்த்துக்கேயர் மாலுமி “Dom Diego Garcia de Moguer” என்பவரின் பெயரிலிருந்து வந்தது. ஆனால் போர்த்துக்கேயர்கள் இத்தீவுகளில் நிரந்தர குடியேற்றம் எதனையும் செய்யாமல் கடற்பாதை வழியில் இங்கு தரித்து பயணம் செய்தனர். 1715ல் பிரான்சிய கடற்படை அதிகாரி Guillaume Dufresne d’Arsel மொரிஷியஸை போர்துக்கேயரிடமிருந்து கைப்பற்றினார். அதனை Île de France என்று பெயரிட்டார்.
அத்தோடு மொரிஷியஸிடன் சேர்த்து சாகோஸ் தீவுகளும் பிரான்சிய ஆட்சிக்குள் வந்தன். ஏனெனில் அப்போது அவை போர்த்துக்கேயரின் ஒரே நிர்வாகப் பிராந்தியமாக கருதப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1776 – பிரான்சியர் சாகோஸ் தீவுகளில் (இன்றைய Diego Garcia உட்பட) சிறிய தொழில்துறை மற்றும் தென்னந் தோட்டங்கள் அமைத்தனர்.
சிலர் Bourbon (Réunion) தீவிலிருந்தும் ஆப்பிரிக்க அடிமைகளும் இங்கே கொண்டுவரப்பட்டனர். Diego Garcia(டியாகோ காசியா) என்ற பெயர் பிரான்சிய ஆவணங்களில் 1700களில் “Ile Diego Garcia” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 1810ல் நெப்போலியன் போர்களின்போது பலம் வாய்ந்த பிரித்தானிய கடற்படை இந்து சமுத்திரத்தின் அராபிய கடலின் தென்பகுதியில் இருந்த Île de France (Mauritius) மற்றும் அதன் அனைத்து “Dependencies” அதாவது Chagos Archipelago உட்பட அனைத்து தீவுகளையும் கைப்பற்றியது.
ஆனால் ஐரோப்பாவில் நெப்போலியன் பெற்ற வெற்றிகளினால் பிரித்தானியா பிரான்ஸ்சுடன் 1802ல் Treaty of Amiens (அமியன் உடன்படிக்கை) செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. Amiens உடன்பாடு பிரிட்டன் போரில் பறிக்கப்பட்ட பெரும்பாலான பிரான்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகளின் காலனிகளை திருப்பி கொடுக்கநேரிட்டது. ஆனால் இலங்கைத் தீவு (Ceylon) மற்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தில் உள்ள டிரினிடாட் (Trinidad) ஆகிய தீவுகள் பிரித்தானியா தக்க வைத்துக் கொண்டது.
காரணம் பெரிய இந்திய துணைக்கண்ட பரப்பை பாதுகாக்க இலங்கை தீவு இந்து சமுத்திரத்தில் பிரித்தானியருக்கு தேவையாக இருந்தது. அதேபோல அமெரிக்க கண்டத்தில் பிரான்சின் ஊடுருவலை தடுக்க டிரினிடாட் டினாட் தீவும் தேவையாக இருந்தது. மூன்று வருடங்களுக்குள் மீண்டும் பிரான்ஸிடன் பிரித்தானியா போரிட வேண்டிய ஏற்பட்டது அந்தப் போரில் பிரான்ஸ் தோல்வியடைய 1814 – Treaty of Paris ஒப்பந்தத்தின் கீழ் பிரான்ஸ், மொரிஷியஸ் மற்றும் அதன் சார்ந்த அனைத்து தீவுகளையும் பிரித்தானியாவுக்கு ஒப்படைத்தது.
இதில் Chagos Archipelago (Diego Garcia உட்பட), Rodrigues, மற்றும் சில சிறிய தீவுகள் அடங்கின. இதற்குப் பின்னர் 1965 வரை Chagos தீவுகள் மொரிஷியஸின் நிர்வாகத்தில் (British Colony of Mauritius) இருந்தன. ஐரோப்பியரின் கடற்படை படையின் வலிமையை கொண்டுதான் ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தில் காலணித்துவ நாடுகளை ஆளவும் அதற்குப் பின்னர் நவ காலனித்துவத்தை கையாள்வதற்கும் இந்த தீவுகளில் தமது கடற்படையை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஐரோப்பியரின் கடற்படை
சுமார் 500 ஆண்டுகள் இந்து சமுத்திரத்தின் வலுச் சமநிலையை ஐரோப்பியர்கள் தங்கள் கைகளில் வைத்திருப்பதற்கு இந்த தீவுகள் உறுதுணையாக இருந்ததனால் முக்கியத்துவம் பெற்றிருந்தன. மொரிஷியஸ் மற்றும் சாகோஸ் தீவுகள் ஒன்றாகவே British Crown Colony of Mauritius என நிர்வகிக்கப்பட்டது.
நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும், சாகோஸ் தீவுகள் 150 ஆண்டுகள் மொரிஷியஸ் ஆட்சிக்குட்பட்டிருந்தன. 1960களில் உலகம் முழுவதும் காலனிகள் சுதந்திரம் பெற்றன. பிரித்தானியாவும் தனது பல தீவுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய நிலை உருவானது இதில் மொரிஷியஸ், சேஷெல்ஸ், மற்றும் சாகோஸ் தீவுகள் அடங்கின.

பனிப்போர் நிலவிய காலத்தில் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளை கண்காணிக்க, கட்டுப்படுத்த குறிப்பாக இந்தியா அணிசாராநாடு என தன்னை பிரகனப்படுத்திக்கொண்டு சோவியற் ஓன்றிய சார்புநிலை எடுத்த நிலையில் இந்துமாகடலில் வலுவான கடற்படை ஆதாரத்தளம் ஒன்று தேவைப்பட்டது.
இந்நோக்கத்தை அடைய அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து இந்துமாகடலில் ஒரு இராணுவத் தளம் அமைக்க ஏற்ற இடமாக Diego Garcia தீவை மூலோபாய ரீதியில் தேர்ந்தெடுத்தனர். இந்தப்பின்னணியில் 1965ல் லண்டனில் பிரித்தானிய-மொரிஷியஸ் பேச்சுவார்த்தை நடைபெற்ற “Lancaster House Constitutional Conference” என்றழைக்கப்படும் இம்மாநாட்டில் மொரிஷியஸ் சுதந்திரத்திற்கான அடிப்படை அரசமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
அம்மாநாட்டில் பிரித்தானியா மொரிஷியஸின் தலைவர்களுக்கு ஒரு நிபந்தனை முன்வைத்தது “நீங்கள் சுதந்திரம் பெறலாம், ஆனால் சாகோஸ் தீவுகளை பிரித்து பிரித்தானியாவின் நேரடி நிர்வாகத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.” இதற்காக மொரிஷியஸின் அப்போது பிரதமர் சர் சேவூசாகூர் ராமகூலம் (Sir Seewoosagur Ramgoolam) மற்றும் அவரது குழுவிற்கு பொருளாதார நன்மைகள் குறித்தான வாக்குறுதிகள் பல அளிக்கப்பட்டது (1)£3 மில்லியன் நிதி, (2)மீன்பிடி உரிமைகள், (3)சாகோஸில் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், (4)மற்றும் மொரிஷியஸின் சுதந்திரத்திற்கு பிரித்தானிய ஆதரவு.
இதனடிப்படையில் 08-11-1965ல் பிரித்தானிய அரசு அதிகாரப்பூர்வமாக British Indian Ocean Territory (BIOT) உருவாக்குவதாக அறிவித்தது. இதில் சாகோஸ் தீவுகள் (முன்பு மொரிஷியஸின் கீழ் இருந்தவை) மற்றும் சேஷெல்ஸிலிருந்து பிரிக்கப்பட்ட அல்டாப்ரா(Aldabra), டெஸ்ரோச்சஸ்(Desroches), ஃபர்குஹார் (Farquhar) தீவுகளும் சேர்க்கப்பட்டன.
இதனால் மொரிஷியஸ் தனது வரலாற்று பிரதேசத்தின் ஒரு பகுதியை இழந்தது. இதன் பின்னரும் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் 1968 மார்ச் 12ம் திகதி மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது என்றாலும் பிரித்தானிய முடியாட்சி அரசியலமைப்பு நிலையே இருந்தது. இங்கே கவர்னர் ஜெனரல் பிரித்தானிய அரசரை பிரதிநிதித்துவம் செய்தார்.
பின்னர், 1991ல் அரசியலமைப்பு சட்ட மறுசீரப்பு மாற்றம் செய்து அதனைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டு குடியரசாக மாறியது. 1971–1973களில் பிரித்தானிய அரசு அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தின் கீழ், Diego Garcia-வில் US military base அமைக்கப்பட்டது. இதற்காக சாகோஸ் தீவுகளில் வாழ்ந்த சுமார் 1,500–2,000 சாகோசிய மக்கள் பெரும்பாலானவர்கள் பிரித்தானியக் குடிமக்களாக இருந்தபோதும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
மொரிஷியஸ், இந்த பிரிப்பு சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்று 1980களிலிருந்து தொடர்ந்து வாதிட்டு International court of Justice (சர்வதேச தீதிமன்றம்) வரை சென்றது. இறுதியாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது ஆலோசனைக் கருத்தை (Advisory ICJ international court of justice Opinion) 2019 பிப்ரவரி 25 அன்று வெளியிட்டது.
ஆலோசனைக் கருத்தில் பின்வருதாறு கூறியது “1965ல் மொரிஷியஸிலிருந்து சாகோஸ் தீவுகளை பிரித்தது சட்டவிரோதமானது; அதனால் பிரித்தானியா அந்த பிரதேசத்தை விரைவாக மொரிஷியஸுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.” என்றது. அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UN General Assembly) அந்த கருத்தை ஆதரித்து ஒரு தீர்மானத்தை 22 May 2019 நிறைவேற்றியது. தீர்மான எண்: A/RES/73/295. (Title: “Advisory opinion of the International Court of Justice on the legal consequences of the separation of the Chagos Archipelago from Mauritius in 1965”) அந்த தீர்மானத்தை 116 நாடுகள் ஆதரித்தன.
அமெரிக்க இராணுவத் தளம்
6 நாடுகள் எதிர்த்தன (அதில் UK, USA, Australia, Hungary, Israel, Maldives). 56 நாடுகள் நடுநிலமை வகித்து விலகின. இத்தீர்மானம்“The United Kingdom should withdraw its colonial administration from the Chagos Archipelago as rapidly as possible, thereby enabling Mauritius to complete the decolonization of its territory.” (“பிரித்தானிய அரசு சாகோஸ் தீவுகளில் இருந்து தனது காலனிய நிர்வாகத்தை மிக விரைவாக வாபஸ் பெற வேண்டும், இதன் மூலம் மொரிஷியஸின் நிலப்பகுதியின் பூரண சுதந்திரம் நிறைவேற்றப்பட வேண்டும்.”) தற்போதைய நிலை என்னவெனில் அரசியல் அர்த்தத்தில் பிரித்தானியா இன்றுவரையும் டியாகோகாசியாவை நிர்வகிக்கிறது, 2025 மே 22 அன்று, பிரிட்டன் சாகோஸ் தீவுகள் உரிமையை மொரிஷியஸிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் செய்தது. மொரிஷியஸின் அரசியல் உரிமை (sovereignty) அங்கீகரிக்கப்படும்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இராணுவத் தளத்தை 99 ஆண்டுகள் வாடகை அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒப்பந்தம் கூறுகின்றது. ஆனால் சாகோசிய மக்களுக்கு இன்னும் முழுமையான திரும்பி வாழும் உரிமை வழங்கப்படவில்லை. ஆனால் அமெரிக்க கடற்படை தனது இராணுவ தளத்தை இங்கு நிறுவி பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கி உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான வான்படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத் தளம், அமெரிக்க கடற்படை மற்றும் வான்படை இராணுவம் உட்கட்டமைப்புக்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாளர் குழுக்கள் என 4,239 பேர் உள்ளனர்.
இத்தீவின் விஸ்தாரமான விமான ஓடுபாதை மற்றும் விமானங்களுக்கான அடிப்படை வசதிகள், அமெரிக்காவின் B-52, B-1, B-2 போன்ற நீண்டதூர போர் விமானங்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு அமெரிக்காவின் நீர் மூழ்கிக் கப்பல்கள், மற்றும் நாசகாரி போர் கப்பல்களுக்கு தரிப்படமாகவும் பயன்படுகிறது.
தளவாட மற்றும் அணு ஆயுதக் களஞ்சியங்களும், எரிபொருள் சேமிப்பு தாங்கிகளும் இங்கு நிறுவப்பட்டு உள்ளன. இந்தத் தீவு வல்லரசுகளான சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் வெகு தொலைவில் இருப்பதனால் பாதுகாப்பு மிகுந்த ஒரு ராணுவ கேந்திர மையமாகவும் விளங்கி வருகின்றது. அதனாலேதான் ஒற்றை மைய உலக அரசியல் அதிகாரத்தின் பிடியை தமது கையில் வைத்திருப்பதற்கு இந்து சமுத்திரம் அவசியமானது.
அத்தகைய இந்து சமுத்திரத்தை தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கு இந்த தீவு அமெரிக்கஇராணுவ நடவடிக்கைகளுக்கு மிக முக்கியம் வாய்ந்த தீவாக கருதப்பட்டு வந்துள்ளது. இத்தனை நாள்வரை அமெரிக்க உளவுத்துறைக்கான முக்கிய தளம் மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கான தனித்துவமான இடமாக டியாகோ காசியா இருந்து வந்துள்ளது.
அமெரிக்க விமானங்கள் மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் தென் ஆசியா பகுதிகளில்இருந்து செயல்படுவதற்கான முக்கிய தளமாகவும், ராக்கின் மீது 1991ல் நடந்த “Desert Storm“ போர், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற 2001 போர் மற்றும்2003 ஆம் ஆண்டு இராக்கின் மீதான படையெடுப்பு போன்ற பெரிய நடவடிக்கைகளில் இந்தத் தளம் முக்கியபங்கு வகித்திருக்கிறது.
இவ்வாறு கடந்த பல நூற்றாண்டுகளாக உலகளாவிய ஆளுகைப் போட்டிக்கு வலுச்சேர்த்த டியாகோ காசியா தீவின்மீது தற்போது ஈரானின் பாலஸ்டிக் ஏவுகணைகள் அவற்றின் வீச்செல்லையை எட்டியது என்பது இந்த தீவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது. இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு எதிராக எழுந்து நிற்கக்கூடிய ஒரு அரசாக ஈரான் மட்டுமே உள்ளது.
அதுவும் நாலாயிரம் கிலோ மீட்டர்களுக்கு உட்பட்ட எல்லைக்குள் இருப்பதினால் இத்தீவு தற்போது நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது. இந்து சமுத்திரத்தின் கண்டப் பரப்பை அண்டி ஆப்பிரிக்காவில் லாமோ தீவு, யுபிட்டி, பாகிஸ்தானின் குவாடர், இலங்கை அம்பாந்தோட்டை, மியார்மாவின் லாமோத்தீவு ஆகிய துறைமுகங்கள் இன்று சீனாவின் கைக்கு சென்றுவிட்டது.
இத்துறைமுகங்களில் அப்போது சீன போர்க் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. இந்தத் துறைமுகங்கள் ஆபிரிக்க, ஆசிய கண்டத்தை ஒட்டி இருப்பதனால் கண்ட பரப்புக்கு வெளியே இருந்து கண்டத்தை ஒட்டியுள்ள துறைமுகங்களை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதாக மாறியுள்ளது. இந்த நிலையில் வளைகுடாவில் இருந்து ஈரானின் ஏவுகணை வீச்செல்லைக்குக்குள் இத்தீவு வந்திருப்பதனால் இந்துசமுத்திரத்தில் டியாகோ காசியா பெற்று வந்த முக்கியத்துவம் எதிர்காலத்தில் இழக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றே.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 04 April, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri