கப்பலினால் ஏற்பட்ட இழப்பினை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
தீ விபத்துக்கு உள்ளான எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சமுத்திரப் பாதுகாப்பு அதிகாரசபை, சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் நாளைய தினம் விரிவான பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் மிகவும் பாரியளவிலானது என்பதனால் அனைத்து விதமான நட்டங்களையும் முழுமையாக ஆராய்ந்து முழு அளவிலான இழப்பீட்டு அறிக்கை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சர், துறைமுக அதிகாரசபை, நாரா நிறுவனம், சுற்றுச்சூழல் அமைச்சு, சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதானிகள் நாளைய சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
கப்பல் நிறுவனத்திடம் உச்ச அளவில் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.