அரச அலுவலகங்களிலும் உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கை: அனுராதா யஹம்பத் (Photos)
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து அரச அலுவலகங்களிலும் உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் திணைக்கள தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோராள ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டம் பல வளங்களை கொண்ட மாவட்டமாக காணப்படுகின்றது. அத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. சுற்றுலாவுக்கு பிரசித்தமான பல இடங்கள் உண்டு.
மாவட்டத்தின் அரசாங்க அதிபர் பதவியை பொறுப்பேற்று நடாத்தும் முதலாவது கூட்டமாக இக்கூட்டம் நடைபெறுகின்றது. இம்மாவட்டத்தின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிகரம இதன்போது வேண்டிக்கொண்டார்.
வெற்று நிலங்கள்
ஆக்கபூர்வமான முன்மொழிவுகளுக்கு காணிகளை விடுவிக்கும் போது மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் பல காணிகள் வெவ்வேறு வேலைத்திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டபோதும் அவை வெற்று நிலங்களாக இருப்பதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்தார்.
காணி, கல்வி, விவசாயம், மீன்பிடி,வீட்டுத்தோட்டம், பொதுவான பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.