மன்னார் தீவு பகுதி பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம்!நிபுணர்கள் எச்சரிக்கை
மன்னார் தீவு பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம் என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் காற்றாலை அமைத்தலும், கனிய மணல் அகழ்வும் தொடர்வதால் இது தொடர்பாக கலந்துரையாடலுக்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,
“மன்னார் தீவுப்பகுதியில் ஏலவே முப்பது காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது 21 காற்றாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
பெருநிலப்பரப்பில் மாதிரி கிராமம் தொடக்கம் முள்ளிக்குளம் வரை முப்பத்தெட்டு காற்றாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி
இதற்கு அப்பால் அதானியின் நிறுவனமும் காற்றாலை அமைக்கும் பணியை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சாத்திரமாக தொடங்கப்பட்ட கனிய மண் அகழ்வு பல ஆயிரக்கணக்காக துளையிட்டு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
துறைசார்ந்த நிபுணர்களின் எச்சரிக்கை
மன்னார் தீவு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரம் குறைந்த நில அமைப்பை கொண்டதாகும். இவ்விதமான செயற்பாட்டால் மன்னார் தீவுப்பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
எனவே இவ் விடயம் தொடர்பாக துறை சார்ந்த திணைக்களங்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கி விரைவாக கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்”என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச அதிபருக்கு கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் வட மாகாணம் ஆளுநர் மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.