களைகட்டும் மே தின நிகழ்வுகள்: அரசியல் கட்சிகள் பலப்பரீட்சை!
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக நாடளாவிய ரீதியில் மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
அந்தவகையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் இன்று பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
“உருட்டு பிரட்டு திருட்டு” என்னும் தொனிப்பொருளில் இந்த மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இம்முறை மே தினப் பேரணிகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன், கட்சியுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பாரியளவில் இதில் பங்கேற்கவுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பஸ் நிலையம் அருகில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று கட்சியின் தலமைப்பீடம் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தை நடத்தாது இருக்கத் தீர்மானித்துள்ளது.
இருப்பினும் மே தின நிகழ்வுகளின் ஓர் அங்கமாக மறைந்த தலைவர் டீ.பீ.இலங்கரத்னவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, இம்முறை பிரம்மாண்டமான மே தினக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மே தினக் கூட்டம்
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
“ஊழல் மிகு அரசுக்கு எதிராக மக்கள் அதிகாரம்” என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் இல்லத்துக்கு அருகாமையில் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

மேலும் முன்னிலை சோசலிச கட்சியினர் "ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்துக்கு அடிபணிந்தாடும் அரஸுக்கு எதிரான மக்கள் அதிகாரம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹைட் மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியினர் கொழும்பு - 05, ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் "அபிவிருத்தி அடையும் இலங்கைக்காக" எனும் தொனிப்பொருளில் விசேட மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
அதேவேளை சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் பேரணி, பிற்பகல் 2.00 மணிக்கு லேக் ஹவுஸ் முன்பாக ஆரம்பமாகி ஏ.ஈ குணசிங்க மைதானத்தை சென்றடையவுள்ளது. அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மே தினக் கூட்டத்தை பெருந்தோட்ட வாரியாக நடத்தத் தீர்மானித்துள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தோட்ட வாரியாக மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.