மாவிலாறு அணை உடைப்பால் கிண்ணியாவில் வரலாறு காணாத வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக, கிண்ணியாப் பிரதேசம் வரலாறு காணாத வெள்ளப் பெருக்குக்கு ஆளாகியுள்ளது.
இதன் விளைவாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சகல உள்ளூர் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள் மற்றும் பாலங்கள். மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்த சில மணி நேரங்களிலேயே ஏழு கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மகாவலி பெருக்கெடுப்பு
முனைச்சேனை, கச்சக்கொடித்தீவு, இடிமன், நடுத்தீவு, காக்காமுனை, சமவாஜதீவு, மஜீத் நகர் பூவரசன்தீவு ஆகிய கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தின் காரணமாக, ஆறு முக்கிய பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன: குறிஞ்சாக்கேணி பாலம் (தற்காலிகப் பாலம்) குட்டிகராச்சி பாலம் முனைச்சேனை பாலம் நடுத்தீவு பாலம் சுள்ளிமுறிச்சான் பாலம் ஆலங்கேணி பாலம் இந்த ஆறு பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, சகல கிராமங்களின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மகாவலி பெருக்கெடுப்பும் பாதிப்பும்: இதேவேளை, மகாவலி கங்கையின் பெருக்கெடுப்பாலும் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மேலும் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அவசர உதவி
ஒட்டுமொத்தமாக, பல கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் அவசர உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.

மீட்புப் பணிகள் தீவிரம் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியான நிலையில் இருக்கும் மக்களைக் காப்பாற்றும் பணியில் முப்படையும் காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ள நீர் வடிந்தோடும் வரை மக்கள் அவதானத்துடனும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri