பணத்தகராறில் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை - மாத்தறையில் சம்பவம்
மாத்தறை மாவட்டம், திக்வெலை பகுதியில் பணக் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை காரணமாக ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அண்ணன் ஒருவரால் தம்பி கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பணக் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை
இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் இருந்த 45 வயதுடைய அண்ணன், தம்பியின் வீட்டுக்குள் கூரிய ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் கைக்கலப்பாக மாறிய நிலையில், அண்ணன் தனது தம்பியைக் கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நான்கு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சந்தேகநபரான அண்ணனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.