நிவாரண திட்டங்களில் பாரிய பிரச்சினைகள்! எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பகுதியில் மரிக்கார் எம்.பி முன்னெடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கொலன்னாவ பகுதிக்கு வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நிதி ஒதுக்கீடுகளில் பாரிய சிக்கல்
அரசாங்க அதிகாரிகள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது மக்களுக்கான நிவாரணங்களுக்கு பயன்படுத்த முடியாவிட்டால் அந்த நிதியில் பலன் இல்லாமல் போய்விடும்.
அரச இயந்திரத்தின் நிதி பயன்பாட்டில் சிறு அச்ச நிலை காணப்படுகிறது. அரசாங்கத்தில் காணப்படும் நிதி சட்டத்திட்டங்களில் உள்ள கட்டுப்பாடுகளில் தளர்த்தல் போக்கை கடைபிடித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்ப முடியும்.
தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று நாள் வேலைத்திட்டங்களுக்கு 3000 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியையும் நிவாரணங்களுக்கு பயன்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.