ஏ9 வீதியை மறித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்: இராணுவம் குவிப்பு(Video)
ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்றினை முற்றுகையிட்டு வவுனியாவில் இன்று(19) மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதைனையடுத்து சம்பவ இடத்திற்கு நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 4 நாட்களாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்து இருந்தும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வரவில்லை.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்றினை முற்றுகையிட்டு ஏ9 வீதியை வழிமறித்து இன்று காலை 6.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 ஊடான வீதி போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன.
சம்பவ இடத்திற்க வருகை தந்த பொலிசார் ஆர்ப்பாட்டக்காருடன் பேச்சுவர்த்தை நடத்திய போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியை விட்டு விலகிச் செல்லவில்லை.
இராணுவம் குவிப்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வரவைழைக்கப்பட்டதுடன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக அத்தியாவசிய தேவைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெட்ரோலில் 500 லீற்றரை வரிசையில் நிற்பவர்களுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் வழங்குவதாகவும், விரைவில் பெட்ரோல் வரும் எனவும் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிபொருள் தாங்கி வண்டியை விடுவித்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளனர்.
மேலும், இராணுவ பாதுகப்புடன் எரிபொருள் தாங்கி வண்டி அங்கிருந்து சென்றதுடன், இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு மத்தியில் 500 லீற்றர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு தாண்டவன்வெளி சந்தியில் எரிபொருள் கோரி மட்டக்களப்பு-கொழும்பு வீதியை மறித்து பொது மக்கள் இன்று(19) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று சனிக்கிழமை இரவு தொடக்கம் பெட்ரோலுக்காக வாகனங்கனங்களுடன் மிக நீண்ட வரிசையில் சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிவரையில் மக்கள் காத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் இல்லை எனவும் பெட்ரோல் இன்று வராது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வரிசையில் காத்திருந்த மக்களிடம் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
இதனையடுத்து வரிசையில் காத்திருந்த மக்கள் வீதியின் மறித்து வாகனங்கள் செல்லவிடாது பெட்ரோல் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு போக்குவரத்து தடைப்பட்டதுடன் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்ற நிலையையடுத்து சம்பவ இடத்துக்கு மட்டு தலைமையக பொலிஸ் பெறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சியின் தலைமையிலான பொலிஸார் சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெட்ரோல் இன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வரமாட்டாது எனவே மக்கள் வீதியை விட்டுவிலகி வீடுகளுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனையும் பொருட்படுத்தாது வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து பொலிஸார் கலைத்து ஆர்ப்பாட்டகாரரை வெளியேற்றியுள்ளனர்.
செய்திகள்-பவன்