நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பலர் கைது!
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையத்தில் 16 வயது மாணவனுக்கு குடிநீருடன் மதுபானத்தை கலந்து ஏனைய மாணவர்கள் பருக்கியுள்ளனர்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகருக்கு அண்மையாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்வி நிலையத்தில் காயமடைந்த மேற்படி மாணவனின் சக மாணவர்கள் போதைப்பழக்கமுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனை கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாணவன் மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம், பொலிஸார் ஊடாக உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி:ராகேஷ்
தெல்லிப்பளை
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2640 வெளிநாட்டு சிகரெட்டுடன் நபர் ஒருவரை தெல்லிப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (04.12.2022) இடம்பெற்றுள்ளது.
வரிகள் செலுத்தாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் டி . தியான் இந்திக்க சில்வா தலைமையிலான குழுவினரே கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மேலதிக விசாரணைகளை அடுத்து சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: கஜிந்தன், தீபன்
யாழ்ப்பாணம்
யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காரில் பயணித்த 26 மற்றும் 27 வயதான இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பகுதியில் வீதிச்சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரை மறித்து பொலிஸார் ஆவணங்களைப் பரிசோதித்த போது, காரிலிருந்தவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவர்களைச் சோதனையிட்டனர்.
சாரதியிடமிருந்து 600 மில்லிகிராம் உயிர்கொல்லி ஹெரோய்னும், அவருடன் பயணித்தவரிடமிருந்து 430 மில்லிகிராம் உயிர்கொல்லி ஹெரோய்னும் மீட்கப்பட்டுள்ளது.
செய்தி:ராகேஷ்
கடமைக்கு இடையூறு
யாழ்., பருத்தித்துறை கோப்பாய் சந்திக்கு அண்மையாக நள்ளிரவில் தெல்லிப்பளை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் குழுவின் பிறந்தநாள் கொண்டாடத்தினால், அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு இருந்தது. அதனால் சட்ட வைத்திய அதிகாரி தனது கடமைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால், இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 இளைஞர்களை கைது செய்ததுடன் , அங்கு நின்ற இரண்டு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது 10 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி:ராகேஷ், தீபன், கஜிந்தன்
இணுவில்
இணுவில் கிழக்கு பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் 51ஆவது படைப்பிரிவில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, இராணுவப் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுன்னாக பொலிஸார் இணைந்து நடாத்திய தேடுதலின் போது குறித்த சந்தேகநபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: கஜிந்தன், தீபன்
கசிப்புடன் சந்தேகநபர் கைது
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 20 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 40 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் ஒருவர் நேற்று (04.11.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமான மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: கஜிந்தன்
வாள்வெட்டு
யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (04.11.2022) இரவு மின்வெட்டு வேளையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 35 வயதான வர்த்தக நிலைய உரிமையாளர் அச்சுவேலி வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
செய்தி: தீபன்
தாக்குதல் சம்பவம்
சிவில் உடையில் வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞரும் உத்தியோகத்தர் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் நேற்று முன்தினம் (03.12.2022) மாலை மாங்குளம் துணுக்காய் வீதியில் மாங்குளம் நகருக்கு அண்மையில் வீதியில் சென்ற இளைஞரை மறித்த சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முற்பட்ட வேளையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தன்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செய்தி: பவன்
மீனவர்களிடையே மோதல்
திருகோணமலை-கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் இரு மீனவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் வெட்டுக் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோதலில் காலி-அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (04.12.2022) அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் வைத்தியசாலையில் இருந்து சொந்த விருப்பத்தில் வைத்தியசாலை தரப்பினருக்கு தகவல் வழங்காமல் சென்றுள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த மோதல் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 47 வயதுடையவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலை-அபயபுர பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அபயபுர- லெனின் மாவத்தையில் வீடொன்றில் புதையல் தோன்றிக் கொண்டிருந்த போது வீட்டு உரிமையாளர் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய்-காலி -மீகமுவ மற்றும் அம்பாரை தீகவாபி பகுதிகளைச் சேர்ந்த 22, 24,28 ,35,வயது உடையவர்களாவர்.
கைது செய்யப்பட்ட குறித்து சந்தேக நபர்கள் ஆறு பேரையும் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பதுர்தின் சியானா
போலி முகவர்கள்
மட்டக்களப்பில் வெளிநாட்டுக்கு அனுப்பும் போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 பேர் தப்பியோடியுள்ளனர்.
மட்டக்களப்பில் ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்த போலி முகவர் நகர் பகுதியிலுள்ள ஒரு அறைகள் வாடகைக்கு விடும் அமைப்பு ஒன்றின் அறையில் தங்கியிருந்தபோது பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு மறைந்திருந்த போலி முகவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் அவருடன் இருந்த 3 உதவி முகவர்கள் தப்பி ஓடியுள்ள சம்பவம் நேற்று முன்தினம் (03.12.2022) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
கொழும்பில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஜரோப்பிய நாடுகளுக்கு சட்டரீதியாக அனுப்புவதாகவும் சுவிஸ்நாட்டிற்கு அனுப்ப முதலில் 15 இலட்சம் தேவை எனவும் அங்கு சென்று பின்னர் வேலை செய்து மிகுதி பணத்தை செலுத்த முடியம் என தெரிவித்து ஆரம்ப கட்டமாக விசா ஏற்பாட்டிற்கு பணம் தேவை என இருவரிடம் 4 இலச்சத்து 25 ஆயிரம் ரூபாவை பணத்தை வாங்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் போலி முகவர் தொடர்பில் முறைபாடு செய்ததைத் தொடர்ந்து குறித்து நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பவன்