மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு: அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் (Video)
மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் முன்னிலையில் வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் கடந்த வழக்கு விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதவானால் பொலிஸாரிடம் நேற்று (30) வினவப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் கருத்து தெரிவிக்கையில்,
மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி
மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதாயின், புதைகுழிக்கு அருகே உள்ள கடைத்தொகுதிகள் உடைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான வீதி மற்றும் மன்னார் தீவு பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர்க்குழாய் தோண்டப்பட வேண்டுமெனவும் பொலிஸார் பதில் வழங்கினர்.
இதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கான இயலுமை தமக்கில்லை எனவும் இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவு உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, அகழ்வுப் பணிகள் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மேலதிக தவணைக் காலம் தேவைப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, புதைகுழி மீதான அகழ்வுப் பணிகள் தொடர்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அறிவிக்க பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் என்பன இதுவரை நீதிமன்றத்தில் கை அளிக்கப்படவில்லை என்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மன்றின் உத்தரவு
அத்துடன், இது தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மையினால், அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயங்களை கவனத்தில் கொண்ட நீதவான் இதற்கான நடவடிக்கைகள் வெகுவிரைவில் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையடுத்து, வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை
ஒத்திவைக்கப்பட்டது.