மன்னாரில் அரச காணிகளை துப்பரவு செய்த மர்ம நபர்கள்: பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை (photos)
மன்னாரில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை துப்பரவு செய்ய முயன்ற மர்ம நபர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பிச்சென்றுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று(31.08.2023) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்றுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற போது இயந்திரங்களை கைவிட்ட நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அரச காணி
அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரச காணியில் உள்ள காடுகளை அழித்து துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை பொலிஸார் மற்றும் இராணுவத்தின் 541 வது படைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன் போது துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரை கண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே கை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் காணியை துப்பரவு செய்ய பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.











