மாங்குள தொடருந்து சேவையை விஸ்தரிக்க வேண்டும்: முல்லைத்தீவு அரசாங்க அதிபர் (Photos)
முல்லைத்தீவு- மாங்குளம் தொடருந்து சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாங்குளம் தொடருந்து நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவை
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. அவற்றில் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இம் மாவட்டத்தில் ஒரேயொரு தொடருந்து நிலையமாக மாங்குளம் தொடருந்து நிலையமே இருக்கின்றது. ஏனைய தொடருந்து நிலையங்களுடன் ஒப்பிடும் போது சேவை வசதிகள் மிகவும் குறைவான நிலையிலே காணப்படுகின்றது.
அதனை உணர்ந்து கொண்டு தொடருந்து நிலைய அதிபர்கள் தம் முயற்சியினால் மக்களுக்கு நல்ல முறையில் சேவை வழங்கக்கூடிய தொடருந்து நிலையமாக அதனை மாற்ற முயற்சித்திருக்கின்றார்கள்.அங்கே நூலக வசதி , சுத்தமான குடிநீர் வசதி போன்ற நல்ல விடயங்களை செய்திருக்கின்றார்கள்.
ஆசன முற்பதிவு
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆசன ஒதுக்கீட்டை முற்பதிவு செய்ய வேண்டுமாக இருந்தால் கிளிநொச்சிக்கு அல்லது வவுனியாவிற்கு சென்றே பதிவினை மேற்கொள்கிறார்கள்.
குறித்த வசதி மாங்குளத்தில் அமைய பெறுமிடத்து மாவட்ட மக்களுக்கு அது அனுகூலமாக அமையும். வாகன ஒதுக்கீட்டினை முற்பதிவு செய்வதற்குரிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதனைவிட சாதாரண தொடருந்துகள் நிறுத்தி சென்றாலும் அதிவேக தொடருந்துகள் குறித்த தொடருந்து நிலையத்தில் நிறுத்துவதில்லை.அதிவேக தொடருந்துகள் நிறுத்தப்பட வேண்டும்.
வாகனங்களின் இட ஒதுக்கீடு மற்றையது அதிவிரைவு தொடருந்தை மாங்குளத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் தீர்மானமாக எடுத்து கொழும்பிலுள்ள தொடருந்து அதிபர்களுக்கும் , ஜனாதிபதி செயலகத்திற்கும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் அவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவ்விரு சேவைகளும் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு கிடைக்குமிடத்து முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இன்னும் பெரிதும் நன்மையடைவார்கள்.” என தெரிவித்துள்ளார்.








