இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் (Photos)
முருகனின் அற்புத வீடுகளில் ஒன்றானதும், இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படுவதுமான கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகியினால் திருவிழா தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெற்றுள்ளது.
ஆலயத்தின் கொடியேற்றம்
விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, அங்கிருந்து கொடித்தம்பம்
ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, பூஜைகளுடன் ஆலயத்தின் உட்பகுதியில்
கொடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தில் கொன்றை மரங்களைக் கொண்டு இந்த கொடியேற்றம் செய்யப்பட்டது. இதன்போது வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு முன்பாகவும் கொடியேற்றங்கள் செய்யப்பட்டன.
இருபது தினங்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் தீர்த்தோற்சவம்
நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆலயத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு
வாவிக்கரையிலுள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









