திமிங்கலத்தில் இருந்து எடுக்கப்படும் பெறுமதியான பொருளுடன் ஒருவர் கைது(Photos)
முல்லைத்தீவில் திமிங்கலத்தில் இருந்து எடுக்கப்படும் பெறுமதியான பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்தின் முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் அம்பர் இருப்பதாக நேற்று(23.01.2023) தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சட்டவிரோத செயல்
இந்த தகவலுக்கமைய முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் பிரானந்து(வயது 47 ) என்பவருடைய வீட்டில் இருந்து 1.85 கிலோ கிராம் நிறையுடைய அம்பர் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு இன்று(24:01:2023) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையில்படுத்தபட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஒரு லட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அம்பரை மேலதிக பகுப்பாய்வுக்காக NARA நிறுவனத்திற்கு அனுப்புவதற்கு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பர் ஆனது திமிங்கிலத்தின் குடல் பகுதியில் உற்பத்தியாகும் ஒரு பதார்த்தம்
எனவும் இதனை உடமையில் வைத்திருந்தமை சட்டவிரோதமானது எனவும் முல்லைத்தீவு
வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெருவித்துள்ளனர்.