நுவரெலியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நுவரெலியா - நானுஓயா பகுதிக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் நானுஓயா விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், இன்று (11.03.2024) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கையானது, நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்றைய தினம் (10.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
410 மில்லிகிராம் போதைப்பொருள்
இதன் போது, பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையில் புகையிரதத்தில் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் மிகவும் சூட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, மீட்கப்பட்ட போதைப்பொருள் 410 மில்லிகிராம் நிறையுடையது எனவும் சந்தேகநபர் தொலைபேசி பண பரிமாற்ற முறையில் போதைப்பொருள் விநியோகிப்பவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன், குறித்த சந்தேக நபர் மாவத்தகம பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செய்தி : திவாகரன்
