பொலிஸ்மா அதிபரின் இல்லத்தை காணொளி எடுத்த நபர் - தீவிர விசாரணையில் பொலிஸார்
பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி) மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் அதிகார பூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளைப் காணொளி எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை சின்னமன் கார்டன்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணொளிகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைபேசியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ஒரு சொகுசு வாகனத்தில் வந்து இறங்கியுள்ளார்.
மேலும், பொலிஸ்மா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தின் நுழைவாயில் அருகே அவர் காணொளி பதிவு செய்து கொண்டிருந்ததை, பணியில் இருந்த சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார்.

சிறப்பு அதிரடிப்படை அதிகாரி அப்பகுதியில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கொழும்பு அவசரகாலப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சின்னமன் கார்டன்ஸ் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்திய பின்னர் சந்தேக நபரை கைது செய்தனர்.
முரண்பட்ட தகவல்களை அளித்ததாக
சந்தேக நபரின் கைபேசியை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில், பொலிஸ்மா அதிபரின் அதிகார பூர்வ இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகள் அத்துடன் தலைமை நீதிபதியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஆகியவற்றின் காணொளிகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணையின்போது, சந்தேக நபர் பொழுதுபோக்கிற்காக அந்த காணொளிகளை பதிவு செய்வதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மேலதிக விசாரணையின்போது அவர் தனது வசிப்பிடம் மற்றும் பிற விவரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்களை அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர், அலுபோமுல்ல, அருகொடவைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.