ராஜபக்சர்களை காப்பாற்ற வேண்டாம்! ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
காலி முகத்திடலில் இடம்பெறற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டத்தின் முன் கொண்டு வரவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றன.
எனினும் புதிய பிரதமர், ராஜபக்சர்களை காப்பாற்றுவாரானால், அவருக்கு எதிராகவும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்த போதிலும் பிரதமர் விக்ரமசிங்க பிரதமராகி புதிய சாதனை படைத்துள்ளார் என்று தொழிற்சங்கவாதி லால் பெங்கமுவ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய தொழிற்சங்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ், நாடு தழுவிய தொடர் போராட்டங்கள் மூலம் இளைஞர்கள் உடனடி அரசியல் சீர்திருத்தங்களையும் அமைப்பில் மாற்றத்தையும் கோருகின்றனர்.
எனவே புதிய பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று அரசியல் சூழலை ஸ்திரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்காக உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சரத்து, ஜனநாயகக் கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை என்றும் குமுதேஷ் குறிப்பிட்டார்.