இலங்கையில் உணவு தொடர்பில் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை
நாடு மிகப்பெரிய உணவு தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன (Maithreepala Sirisena) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் சேதனப் பசளை மாதிரிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. சீனாவிலிருந்தோ வேறு ஏதேனும் ஓர் இடத்திலிருந்தோ கொண்டுவந்திருந்தனர். அதில் விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் இருந்ததாக தெரியவந்தது.
மாதிரி இறக்குமதியின் போதே இந்த நிலை ஏற்பட்டது என்றால் ஏன் நாம் இந்த நிலைக்கு விழுந்தோம் என்பதில் கவலை கொள்கின்றேன்.
முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், 17 வருடங்களாக மகாவலி அமைச்சராக பதவி வகித்தவர் என்ற வகையில், முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் என்ற வகையில் எனக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய நிலைமை குறித்து கவலை கொள்கின்றேன்.
இதிலிருந்து மீள்வதற்கு நாம் துரிதமாக செயற்பட தவறினால் உணவு மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தொடர்பில் நாம் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.