மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள மைத்திரி
ரிட் மனு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் தனக்கெதிரான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கை இடைநிறுத்துமாறு கோரியே ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் வணக்கத்துக்குரிய தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ மற்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை சவாலுக்கு உட்படுத்தியே மைத்திரிபால சிறிசேன, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றை நாடியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் அக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.