பாடசாலைக்குள் அத்துமீறல் : உடனடி நடவடிக்கை எடுத்த மகிந்தானந்த அளுத்கமகே
பாடசாலையொன்றின் வளாகத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தலையீட்டில் தோல்வியடைந்துள்ளது.
கண்டி (Kandy) மாவட்டத்திற்குட்பட்ட தொலஸ்பாகே தமிழ் வித்தியாலய பாடசாலை வளாகத்தில் முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அத்துமீறி பாடசாலைக்கு சொந்தமான இடம் ஒன்றை தனக்கு உரியதென கூறி சுத்தம் செய்துள்ளார்.
இதன்போது பாடசாலை நிர்வாகம் அதனை தடுக்க முயற்சித்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
மீளக்கையளிப்பு
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டையடுத்து பிரச்சினை தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உடனடியாக குறித்த நபரின் அத்துமீறலை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே பணித்துள்ளார்.
அதற்கமைய நேற்றையதினம் (09.04.2024) குறித்த பகுதி பாடசாலைக்கு மீளவும் கையளிக்கப்பட்டுள்ளது.