மகிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தப் பதவியும் இல்லை! அரசாங்க தரப்புக்குள் வலியுறுத்தல்
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தவொரு பதவியும் வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, தனது பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில் மிக விரைவில் நாடு திரும்பவுள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்காவினால் அண்மையில் இலங்கை மீது விதிக்கப்பட்ட 50 வீத சுங்கத் தீர்வையை கணிசமான அளவில் குறைப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பு, சமகால அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வலுவான பிணைப்புகளை ஏற்படுத்துவதில் அவர் வழங்கிய ஒத்துழைப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டு கொழும்பில் அவருக்கு உயர் பதவியொன்றை வழங்க அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஒரு தரப்பு உத்தேசித்துள்ளது.
புதிய பதவி
எனினும் மகிந்த சமரசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் புதிய பதவிகளை வழங்கக் கூடாது என்று அளும் கட்சியின் அதிகாரம் மிக்க தரப்பினர் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர்.

மகிந்த சமரசிங்கவுக்கு தற்போதைய இராஜதந்திரப் பதவிக்கு அப்பால், தற்போதைய அரசாங்கத்தில் ஏதேனும் புதிய உயரிய பதவியொன்றை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை மட்டத்திலோ அல்லது அரசாங்கத் தரப்பிலோ எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படக் கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடாகும்.
அரசியல் நடவடிக்கை
தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக இராஜதந்திரக் கடமைகளை ஆற்றிவரும் மஹிந்த சமரசிங்கஇ முன்னொரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகள் ஊடாக கடந்த காலங்களில் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டிருந்த ஒருவராவார்.

எனினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகி, தற்போது தூதுவர் பதவியை மாத்திரமே வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.