ஷிரந்திக்காக தேரர்களை நாடிய மகிந்த..! சிங்கம் புல் சாப்பிடுவதில்லையாம்..
மகிந்த ராஜபக்ச ஒரு சிங்கம். சிங்கம் ஒருபோதும் புல்லினை உணவாக எடுத்துக் கொள்வதில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என அண்மைய நாட்களில் செய்திகள் அதிகமாக வெளிவந்திருந்தன.
ஷிரந்தி ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம்
இந்த நிலையில், தன்னுடைய மனைவி ஷிரந்தி ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மகாநாயக்க தேரர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் குறித்த செய்தியை மகிந்த தரப்பு மற்றும் மகாநாயக்க தேரர்கள் தரப்பு மறுத்துள்ளதுடன் அவை போலியான செய்தி என்றும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், மகாநாயக்க தேரர்களிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்ச ஒரு சிங்கம், சிங்கம் எப்போது புல்லை உண்பதில்லை. இதுபோன்ற வேலைகளில் மகிந்த ராஜபக்ச ஈடுபடமாட்டார் என்பது எமக்குத் தெரியும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனவே மகாநாயக்க தேரர்களிடம் மகிந்த ராஜபக்ச கோரிக்கை முன்வைத்ததாக தெரிவிக்கப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.