மகிந்தவுக்கு வீடு கட்ட நாட்டு மக்களிடம் கோரப்படும் ஒரு ரூபாய்
மகிந்தவுக்கு தகுந்த வீட்டினை கட்டிக்கொடுக்க நாட்டு மக்கள் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) இந்த வீட்டில் இருந்து வெளியில் அனுப்பினால் நாட்டு மக்களிடம் ஒவ்வொரு ரூபாவாக வாங்கியேனும் நாங்கள் நாட்டைக் காத்த தலைவர் மகிந்தவுக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த என்பது ஒரு நாமம்..
நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் விஜேராமயவிலுள்ள இல்லத்திற்கு சென்று திரும்பும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தான் மகிந்தவின் நலன் விசாரிக்க வந்ததாகவும் மகிந்த ராஜபக்ச என்பது ஒரு பெயரல்ல ஒரு நாமம் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், நாம் அச்சமடைய தேவையில்லை குற்றம் இழைத்திருந்தால் தண்டணை வழங்குவதற்கான உரிமையுண்டு. ஆனால் அரசியல் குரோதங்களுடன் அரசியல் எதிர்தரப்பினரை நடத்திய அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஏதோவொரு வகையில் மகிந்த ராஜபக்சவிடம் அரசியல் ரீதியில் பழிவாங்க முயற்சிக்கும் போது அதனை அரசியல் அநாகரிகமாகவே நான் பார்க்கின்றேன் என ரோஹித அபேகுணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.