வீழ்ந்த மொட்டு கட்சியை பலப்படுத்த களமிறங்கியுள்ளார் மகிந்த ராஜபக்ச
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிமட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் மொட்டுக் கட்சியைத் தூக்கி நிமிர்த்துவதற்கு மகிந்த ராஜபக்ச முழு வேகத்தில் தற்போது களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் மொனராகலையில் முதலாவது கூட்டத்தை நடத்திக் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தைக் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு மத்திய நிலையமாக அவர் மாற்றியுள்ளார்.
கட்சியை முன்னெடுக்க நடவடிக்கை
அந்த வீடு பல கோடி ரூபா செலவில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்ட மண்டபம் சந்திப்புக்களை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் இருந்த மொட்டு இப்போது 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்டுள்ளது.
அவர்களுள் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒட்டி நிற்கின்றார்கள்.
கட்சியின் ஆதரவாளர்கள் பங்கு
இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்துப் பிரிந்து சென்ற கட்சியின் ஆதரவாளர்கள் வாக்காளர்கள் அனைவரையும் மீண்டும் இணைத்துக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இப்போது மகிந்த இறங்கியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் கட்சியைப் பலப்படுத்திவிட வேண்டும் என்ற
இலக்கைக் கையில் எடுத்துக்கொண்டு மகிந்த களமிறங்கியுள்ளார் என்று அவரது
வட்டாரம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.