அநுரவுக்கு மகிந்த அஞ்சவில்லை -அவரது அரசியல் பயணம் தொடரும்! மொட்டுக் கட்சி சூளுரை
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர், அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. அநுரவுக்கு மகிந்த அஞ்சவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து தங்காலைக்கு மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பயணம்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"செப்டம்பர் 11 என்பது உலகில் பலம் பொருந்திய நாட்டுக்கும் பயங்கரவாதத்தின் அச்சம் தென்பட்ட நாளாகும். செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த நாளாகும்.
பயங்கரவாதிகளிடம் இருந்து இலங்கையைப் பாதுகாத்த தலைவர் இப்படியானதொரு நாளில் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு இந்த வீட்டை (விஜேராம) வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.
மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதில்லை. தங்காலையில் இருந்துதான் அவரது பயணம் ஆரம்பமானது.
எனவே, அங்கிருந்து புதிய பயணம்கூட ஆரம்பமாகலாம். அநுரவின் அரசியல் அழுத்தங்களுக்கு நாம் அஞ்சவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் அல்ல அதற்கு மேல் இருந்தாலும் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.




