ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சபை தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் சபையின் தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அதன் ஆளுநர்களில் ஒருவராக அங்கம் வகிக்கின்றார்.
அந்த வகையில், இன்று பிற்பகல் காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற குறித்த ஆளுநர்கள் சபையின் 54வது கூட்டத்தில், 2021/2022ஆம் ஆண்டுக்கான தலைவராக, பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த கூட்டம் ஜோர்ஜியாவின், திபிலிசி நகரில் இடம்பெற திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நிலவும் கோவிட்-19 பரவல் நிலை காரணமாக, காணொளி தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருந்துமை குறிப்பிடத்தக்கது.