விறகு தேட சென்ற இரண்டு யுவதிகள் மாயம்: அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (Photos)
விறகு தேட சென்ற இரண்டு யுவதிகள் கடந்த 06 நாட்களாகக் காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவகுமார் ரூபிகா வயசு 15, சிவலிங்கம் ஸ்ரீதேவி வயசு 18 ஆகிய இரண்டு யுவதிகளும் ஆவர்.
கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டிலிருந்து விறகு சேர்க்கச் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேடுதல் பணியில் பொலிஸார்
இவர்களின் தாய் தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்படச் சகல இடங்களிலும் தேடிய போதிலும் இதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் 02 திகதி அன்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இரண்டு யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளியாகத் தொழில் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இவர்களின் உறவினர்கள் நால்வர் கொழும்பில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த யுவதிகள் காணாமல் போனதால் இதுவரை இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்காத
காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லாமல்
இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யுவதிகள் தொடர்பாக எவ்வித தகவலும் இதுவரை கிடைக்காததன் காரணமாகப் பிரதேச மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையும் தோன்றியுள்ளன.
இதனால் தங்களது பிள்ளைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்
என்பதனையும் இந்த விடயம் சுட்டிக்காட்டுகின்றன.