மாவீரர்களை நினைவேந்த ஈகைச்சுடருடன் திரண்ட உறவுகள்!கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயகம் (PHOTOS)
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தமதுயிரை ஈகம் செய்த மாவீரர்களை வடக்கு - கிழக்கு தாயக தேசம் வலிகளுடன் நினைவுகூருகின்றது.
நமது தேசத்துக்காக உயிர் நீத்த மாவீரர்களை இன்றைய மாவீரர் நாளில் வணங்கி தாயக பூமி எங்கும், சிவப்பு - மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை, தாயக சொந்தங்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லத்தில் திரண்ட பெருந்திரளான மக்கள் உயிர்துறந்த வீரர்களை எண்ணி அழுது புலம்பி நினைவுகூர்ந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் பெருமளவான மாவீரர்களின் உறவுகள் முன்னிலையில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
இதன்போது மாலை 6.05மணிக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மணி ஒலிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.பொதுச்சுடர் பலாலி விமானப்படை தாக்குதலில் வீரகாவியமான கரும்புலி மேயர் ஜீவரஞ்சனின் தாயார் ஏற்றினார்.
இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்,உறவுகள் கண்ணீர்மல்க விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தி தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
செய்தி,புகைப்படங்கள் - குமார், ருசாத், சரவணன், நவோஜ்