கொக்குத்தொடுவாயிலிருந்து மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாள இலக்கத் தகடு(Photos)
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் 6 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று(09.09.2023) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள்
நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாள இலக்கத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இன்றும் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






