மின்கம்பத்துடன் மோதிய லொறி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்
நுவரெலியா - ஹட்டன் ஏ - 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று நானுஓயா பங்களாவத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமுற்ற சாரதியும் மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதேவேளை, விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.
கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரித்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா




