தமிழ் பேசும் தரப்புக்களின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இந்திய பிரதமருக்கு கடிதம்
தமிழ்ப் பேசும் தரப்புக்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில் தமிழ் பேசும் தரப்புக்களின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆவண வடிவம் தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டல் அரங்கத்தில் இன்று நடைபெற்ற தமிழ்ப் பேசும் தரப்புக்களின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டது.
அழைக்கப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றியமை சிறப்பம்சம்.
புளாட் சார்பில் சித்தார்த்தன் தமக்குப் பதிலாக ஆர்.ராகவனை அனுப்பியிருந்தார். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தமது சார்பில் அமீர் அலியை அனுப்பியிருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.
கூட்டத்துக்கு தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார். அவருடன் சுமந்திரனும் இக்கூட்டத்தில் பங்குபற்றினார்.
ஏற்கனவே இக்கூட்டத்தில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் 5 பக்க நகல் ஆவணமொன்றை இன்று கூட்டத்தில் கையளித்திருந்த நிலையில், அந்த நகல் ஆவணத்தை ஏற்பதற்கு தமிழரசுத் தரப்பு மறுத்தது. தமிழரசு தரப்பினால் ஒரு நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் சேர்த்துக் கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டது.
தமிழரசு தரப்பினால் ஒரு நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் சேர்த்துக் கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டது.
இந்நிலையில் வயதில் மூத்த தலைவர்கள், கூட்டத்திலிருந்து வெளியேற எஞ்சியோர் ஒன்றிணைந்து தொடர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டனர்.
அதனடிப்படையில் இரண்டு ஆவணங்களையும் ஒன்றிணைத்து புதிய நகல் வடிவத்தை தயாரிப்பதில் நேற்று மாலை முழுவதும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர்.
சுமந்திரன், மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், செல்வம், குருசாமி சுரேந்திரன், ஸ்ரீகாந்தா, மாவை ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் நகல் வடிவதற்கான பூர்வாங்க இணக்கம் எட்டப்பட்டது. தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு விடயங்களையும், அத்தோடு இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் ஒன்றிணைத்து, புதிய நகல் வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பு தமிழரசின் பேச்சாளர் சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அது தயாரிக்கப்பட்டதும், அதனை அவர் எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பார். அவையும் அவற்றை ஆராய்ந்து சம்மதித்த பின்னர், அது பகிரங்கப்படுத்தப் படுவதோடு, அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து அதில் ஒப்பமிடவும் அதனை இந்தியப் பிரதமருக்கு
அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.