தற்கொலை செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சட்டத்தரணி
தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, சட்டத்தரணி ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதிகள் சபாநாயகர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.டபிள்யூ அபேவர்தன என்ற சட்டத்தரணியே உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் அங்கம் வகித்து வந்த தம்மை காரணம் எதுவும் கூறாமல் நீக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் பாலர் வகுப்பு முதல் உயர்தரம், பல்கலைக் கழகம் வரையில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தமக்கு, நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்ற அனுமதி வழங்கப்படவில்லை என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மக்களிடம் தாம் பட்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால் தாம் தற்கொலை செய்து கொள்ள ஜனாதிபதி அனுமதிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
காணி மறுசீரமைப்பு ஆணைணக்குழுவில் கடமையாற்றிய காலத்தில் தாம் பல்வேறு ஊழல் மோசடிகளை அம்பல்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி - ஹந்தானை பிரதேசத்தில் காணியொன்று சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டமை சம்பவம் தொடர்பில் அம்பலப்படுத்திய காரணத்தினால் தம்மை ஆணைக்குழுவிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே மக்களுக்கு கடனை செலுத்த முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டுமென அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.