தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய நிறுவன பிரதானிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை..!
காரணம் இன்றி அத்தியாவசிய சேவைகளுக்கான கடிதங்களை வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கிடையே, நேற்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்திற்கு 55,944 வாகனங்கள் பிரவேசித்துள்ளன. இதில் சுகாதார சேவையுடன் தொடர்புடைய வாகனங்கள் அதிகம் காணப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி 3,528 வாகனங்கள் பிரவேசித்துள்ளன.
நிறுவன தலைவர்களின் செயற்பாடு மிகவும் துரதிஷ்டவசமானதாகும். மிக முக்கியமான நபர்களை மாத்திரம் நிறுவனங்களுக்கு அழைக்கும்படி வலியுறுத்தியிருந்தோம். அத்தியாவசிய சேவையாக இருந்தாலும் சரி நிறுவனத்தில் 100 பேர் இருந்தால் அனைவருக்கும் அனுமதி வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்படும். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டிருந்தால் நிறுவன தலைவர்களுக்கு எதிராக ஐந்து வருட கால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.