கோவிட் தொற்றுக்குப் பின்னர் மீண்டும் களம் இறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கோவிட் தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து இன்னும் நான்கு நாட்களில் வெளியேறவுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக சஜித் பிரேமதாசவும் அவரது மனைவியும் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சஜித் பிரேமதாசவுக்கு கோவிட் தொற்றிய போதிலும் பாரதூரமான நோய் அறிகுறிகள் தென்படவில்லை.
இந்த நிலையில், வழமை போல் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க சஜித் பிரேமதாச தயாராகி வருகிறார். மிக விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுவை கூட்டுமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சித் தலைவர், கப்பல் எரிந்த சம்பவம் உட்பட நாட்டில் கூடிய கவனம் செலுத்தப்பட்ட முக்கிய பிரச்சினைகள் சம்பந்தமாக வைத்தியசாலையில் இருந்தவாறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
சஜித் பிரேமதாசவை தவிர, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் நளின் பண்டார ஆகியோருக்கு கோவிட் தொற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து முஜிபுர் ரஹ்மான் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.