மகிந்த, ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்தவை கைது செய்ய வேண்டும்:சட்டத்தரணிகள் முறைப்பாடு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை குற்றவியல் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து,நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, சட்டத்தரணிகள் சிலர் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்கள், காலிமுகத் திடல், அலரி மாளிகைக்கு எதிரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டகார்கள் மீது மதுபோதையில் சட்டவிரோதமான முறையில் ஒன்றுக்கூடி தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தமை, அச்சுறுத்தல் சதித்திட்டம் தீட்டி, அதற்கு அனுசரணை வழங்கியனர் என சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஜனநாயக சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் சட்டத்தரணி கமல் விஜேசிறி, சட்டத்தரணி துசித குணசேகர, சட்டத்தரணி ரஜித் லக்மால், சட்டததரணி நிஷாந்தி வெத்தசிங்க உள்ளிட்டோர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் பேரை பேருந்துகளில் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு பிரதமர் உரையாற்றிய பின்னர், ஒரு மாதத்திற்கு மேல் மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆகிய இடங்களில் அமைதியான போரட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கைதிகளை கலவரம், குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கு எதிராக இலங்கை குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் சட்டத்தரணிகள், பொலிஸ் திணைக்களத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.