குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் - வாசுகி வல்லிபுரம்
குற்றவாளிகள் சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்குச் சட்டங்கள் அனுமதிக்காத வகையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கவனயீர்ப்பு பேரணியின் பின்னர் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் தேசிய பேரிடர் காரணமாக நாட்டு மக்கள் மரண ஓலங்களையும், மரண அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருக்கின்ற இந்த சூழ்நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான பாலியல் வன்புணர்வுகள், கொடுமைகள், கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என நாட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இதனால் பல சிறுமிகள் சீரழிக்கப்படுகின்றமையை நாங்கள் அறிகின்றோம். இதற்கு எதிராக நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகிற சிறுவர்கள், பாதுகாக்கப்படவேண்டியவர்கள்.
பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்படவேண்டியவர்களே. அவர்களைச் சீரழிக்கின்ற சூழ்நிலையில் எங்களுடைய நாடு தள்ளப்பட்டுப் பல சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதை நாங்கள் அறிகின்றோம்.
இதனை எங்கள் பெண்கள் அமைப்பு சார்பாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண்கள் சிறுமியர்கள் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.
அவர்களிற்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான சூழ்நிலை காணப்படுமிடத்து எதிர்வரும் காலங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்படுவார்கள். குற்றவாளிகள் சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்குச் சட்டங்கள் அனுமதிக்கக்கூடாது.
சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி சட்டங்களை அமுல்ப்படுத்தும் வகையிலான சாதகமான சூழலை அரசு கொண்டு வர வேண்டும்.
இதற்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றோம். தொடரும்பட்சத்தில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு பேரணிகளும் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.