மன்னாரில் பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் 2ஆம் கட்டம் ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 'பைஸர்' கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் 2ஆம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிரதேச செயலகம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து இன்று காலை 8 மணி தொடக்கம் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
மன்னார் கடற்பரப்பில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் காரணமாக இந்திய மீனவர்கள் ஊடாக நாட்டுக்குள் கோவிட் தொற்றின் திரிவான டெல்டா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திற்கு அண்மையில் 2ஆம் கட்டமாக 22,230 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், குறித்த தடுப்பூசிகளை சமூகத்திற்கு வழங்கும் செயற்பாடு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய கரையோர கிராமங்களில் தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி, சுகாதாரத் துறையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினருடைய ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



