மக்கள் இறப்பிற்கு காரணம் மொழியே! கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தார் சிறீதரன்
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் திடீரென கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வடமாகாணம் சார்ந்த கூட்டத்திலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை, ஆகவே நான் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன் என கூறிவிட்டு, சிவஞானம் சிறிதரன் வெளிநடப்பு செய்துள்ளார்.
கூட்டத்தின் போது இடைநடுவே வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணசபையினுடைய கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயலாளர்கள், அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்திற்கு நான் போயிருந்த போதும் ஆங்கில மொழியிலும் சிங்கள மொழியிலுமேயே அந்த கூட்டத்திற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
"எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்வதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டும்" என்று நான் கேட்டபொழுது செய்கின்றோம் பார்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால் அதன்பின்னர் ஒரு மணி நேரம் அங்கே இருந்த போதும் எந்த விதமான மொழி மாற்றத்திற்கான ஆயத்தங்களும் நடைபெறவில்லை.
இதனால் இந்த விடயங்களை என்னால் கிரகித்து பதில் சொல்ல முடியாது என்று சொன்னேன். எத்தனையோ ஆயிரம் பேர் இந்த மண்ணில் இறந்ததற்கு அடிப்படை மொழி ரீதியான பிரச்சினையே ஆகும்.
இதனாலேயே மாகாணசபை முறைமை தோன்றியது. நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வடமாகாணசபையிலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை.
ஆகவே நான் இந்த கூட்டத்தில் இருப்பதில் பிரயோசனமில்லை என்று கருதுகிறேன் எனக் கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.