மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு: இரு வான்கதவுகள் திறப்பு (Photos)
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து இன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரிப்பு
அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண்ணை அகற்றி ஒரு வழி போக்குவரத்தாக மாற்றியுள்ளனர்.
பல பகுதிகளில் மண்சரிவு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு பதிவாகி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று மாலை 3 மணியளவில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் மரமும் சரிந்து
விழுந்துள்ளது.
இந்த மண்சரிவு காரணமாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.